வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், கொண்டோமினியம் உள்ளிட்ட தனியார் வீடுகளின் வாடகை ஜனவரி மாதம் வீழ்ச்சியடைந்தது.
வீட்டு உரிமையாளர்கள் வாடகையை நிர்ணயிப்பதில் நீக்குப்போக்காக நடந்துகொள்வது அதற்குக் காரணம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வீவக வீட்டு வாடகை 0.7 விழுக்காடு குறைந்துள்ளது. அதற்கு முந்திய மாதமான டிசம்பரில் வாடகைகள் 1 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இந்தத் தரவுகள் சிங்கப்பூர் சொத்துச் சந்தை அமைப்பு, 99.கோ உள்ளிட்ட சொத்துச் சந்தை நிறுவனங்களின் இணையத்தளங்களில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
கொண்டோமினியம் வீடுகளின் வாடகை 0.7 விழுக்காடு குறைந்தது. தொடர்ந்து ஆறாவது மாதமாக தனியார் வீடுகளின் வாடகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஜூலை 2023ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2024 வரையிலான வாடகை 4.3 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இருந்த 4.9 வளர்ச்சி இப்போது காணாமல் போய்விட்டது என்று ஆரஞ்ச் டீ குழுமத்தின் மூத்த நிர்வாகியான கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
தற்போதைய வீட்டு வாடகைச் சந்தையில் வாடகைக்கு வீடு கேட்டு வருபவர்கள்தான் வாடகையை நிர்ணயிக்கும் போக்கு உள்ளது. இதனால், வீட்டு உரிமையாளர்கள் அதிக வாடகையை எதிர்பார்க்க முடியாது என்றார் ஹட்டன்ஸ் ஆசியாவின் தலைமை நிர்வாகி மார் யிப்.
2023ஆம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வாடகை 0.4 விழுக்காடு கூடி உளளது. நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாடகை 2.4 விழுக்காடு கூடியது. இருப்பினும், நகரின் மையப்பகுதியில் வாடகை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதிகரித்து வரும் வட்டி விகிதம், சொத்து வரி போன்றவை வீட்டு உரிமையாளர்களுக்கு அழுத்தம் தருகின்றன. மேலும், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதால் வாடகையை உயர்த்த முடியாமல் உரிமையாளர்கள் இருப்பதாக இஆர்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி யூஜின் லிம் குறிப்பிட்டார்.
வீடு காலியாக இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காகவும் வாடகையை மாற்றம் செய்யாமல் சில வீட்டு உரிமையாளர்கள் உள்ளதாக திரு லிம் கூறினார்.
இந்நிலையில், வீவக வீடுகளை வாடகைக்கு விடும் எண்ணிக்கை 4.6 விழுக்காடு கூடியுள்ளது. அதாவது 3,024 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
ஆண்டு அடிப்படையில் வீவக வாடகைச் சந்தை 5.3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.