உடனடி அக்கறைகளை எதிர்கொள்வது மட்டுமின்றி, எதிர்காலத்துக்கு சிங்கப்பூரைத் தயார்ப்படுத்த இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் கொள்கை ரீதியாகப் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
கூடுதல் வளர்ச்சியை எட்டுவது மேலும் பல வேலைகளை உருவாக்குவது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை மேம்படுத்தி வாழ்நாளுக்குத் தேவையான திறன்களை ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் இவற்றில் அடங்கும் என்றார் அவர்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான ஒரு மணி நேர கலந்துரையாடலில் நிதி அமைச்சருமான திரு வோங் பேசினார்.
இந்தக் கலந்துரையாடல் பிப்ரவரி 21ஆம் தேதியன்று சிஎன்ஏ ஒளிவழியில் ஒளிபரப்பானது.
“மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும். ஒரே ஒரு வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்தையும் செய்துவிட முடியாது. இருப்பினும், திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படும். அவை மறுஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும்,” என்று திரு வோங் கூறினார்.
பிப்ரவரி 16ஆம் தேதியன்று வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது முன்வைத்த திட்டங்களை திரு வோங் மீண்டும் பட்டியலிட்டு விவரித்தார்.
அவற்றில் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள், குறைந்த, நடுத்தர வருமானப் பிரிவுகளுக்கான ரொக்க வழங்கீட்டுத் தொகை, வர்த்தகங்களுக்கான வருமான வரிக் கழிவு ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு வளையங்களை வலுவூட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் பேசினார்.
வீடமைப்பு, ஒய்வுக்காலம், சுகாதாரப் பராமரிப்பு முதலியவற்றில் மக்கள் நலம் காக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
கலந்துரையாடலில் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் உதவித் தலைவருமான (என்டியுசி) அப்துல் சமாட் அப்துல் வஹாப், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பவுலின் ஸ்ட்ரோகன், திருமணமான தம்பதிகளும் தொழில்முனைவர்களுமான மே லீனா கிருஷ்ணன் மற்றும் ஜீவன் ஆனந்தன் ஆகியோரும் பங்கெடுத்தனர்.
2025ஆம் ஆண்டிலிருந்து 55 வயதும் அதற்கும் அதிகமானோருக்கு மத்திய சேமநிதி சிறப்புக் கணக்கு இருக்காது என்று வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் ஒய்வுக்காலக் கணக்கில் கூடுதல் பணம் போட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இணையம் வாயிலாகப் பலர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் இந்த முடிவு மத்திய சேமநிதியின் கொள்கையுடனும் நோக்கத்துடனும் ஒத்துப்போவதாக திரு வோங் கூறினார்.