முழுமைத் தற்காப்பின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘எஸ்ஜி ரெடி’ திட்டத்தின் ஓர் அங்கமாக பிப்ரவரி 26ஆம் தேதி, தாமான் ஜூரோங்கில் உணவு, தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் மக்கள் கழகமும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்தன.
“நம் உணவு, தண்ணீர் விநியோகம் என்றுமே சீராக இருக்கு என நாம் எதிர்பார்க்க முடியாது.
“சமூகமாக, எவ்வாறு அவசரகாலத்திற்கு முன்கூட்டியே ஆயத்தமாக இருக்கிறோம், அடுக்குமாடி வீட்டின் கீழே வந்து உணவு, தண்ணீர் பெற இயலாத குடியிருப்பாளர்களை எப்படி முன்கூட்டியே அடையாளம் காண்கிறோம், அவசரகாலக் குழுக்களை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதை இந்த நடவடிக்கை சோதித்தது,” என்றார் தாமான் ஜூரோங்கில் இப்பயிற்சியில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.
உணவு விநியோகத் தட்டுப்பாடு
பிப்ரவரி 26ஆம் தேதி சிங்கப்பூர் முழுவதும் 21 சந்தைகளும் உணவங்காடி நிலையங்களும் மூடப்பட்டன. அவற்றில் சில பிப்ரவரி 27 வரை மூடப்பட்டிருக்கும். மேல்விவரங்களுக்கு https://www.nea.gov.sg/our-services/hawker-management இணையத்தளத்தை நாடலாம்.
ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் சுத்திகரிப்புப் பணிகளோடு சேர்த்து இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
உணவங்காடிக் கடைக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இதைப் பற்றித் தெரியப்படுத்த, உணவங்காடிக் கடைக்காரர்கள் சங்கத்தோடு இணைந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அறிவிப்புச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
தண்ணீர் விநியோகத் தட்டுப்படு
தாமான் ஜூரோங்கில், புளோக் 181, 182 யங் ஷெங் சாலையில் அமைந்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) கிட்டதட்ட 200 வீடுகளுக்கு, பிப்ரவரி 26ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது.
அதனால் குடியிருப்பாளர்களுக்கு பொதுப் பயனீட்டுக் கழக (பியுபி) தண்ணீர் வண்டி தூய்மையான நீரை விநியோகம் செய்தது. தண்ணீரை நிரப்ப வாளிகள், கொள்கலன்களைக் குடியிருப்பாளர்கள் கொண்டுவந்தனர்.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் தண்ணீரை விநியோகிக்க, ஒரு மணி நேரத்துக்கு 300 ஐந்து-லிட்டர் தண்ணீர்ப் பைகளை நிரப்பக்கூடிய ‘பியுபி’ இயந்திரமும் உதவியது.
நெருக்கடி நேரங்களில் தற்காலிகத் தண்ணீர் விநியோகத்திற்கு இத்தகைய தண்ணீர் வண்டிகளைத்தான் ‘பியுபி’ முதன்மையாகப் பயன்படுத்தும். நீண்டகால அல்லது பரவலான தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்தால் அது, தண்ணீர்ப் பைகளை வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் வழங்கக்கூடும்.
சமூக உணர்வு, ஒற்றுமை
ஜூரோங் குழுத்தொகுதியின் சமூக அவசரகால செயற்குழுக்கள் (CERT) ,சமூக அவசரகால ஈடுபாட்டுக் குழு (C2E), குடியிருப்பாளர் குழுக்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 அடித்தள அமைப்புத் தலைவர்கள், தொண்டூழியர்கள் எனப் பலதரப்பினர் இப்பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் முன்கூட்டியே வீடு வீடாகச் சென்று இத்தடையைப் பற்றிக் குடியிருப்பாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.
பிப்ரவரி 26ஆம் தேதி, முதியோருக்கும் நடக்க சிரமப்படுபவர்களுக்கும் அவரவர் வீடுகளுக்கே சென்று தண்ணீர்ப் பைகளை வழங்கவும் அவர்கள் உதவினர்.
அவசரகாலத்தில் உதவ உடற்குறை ஒரு தடையன்று
2013லிருந்து தாமான் ஜுரோங் சமூக அவசரகாலச் செயற்குழுக்களில் தொண்டூழியராகச் செயல்பட்டுவரும் திரு பழனிசாமி, 74, தண்ணீரை விநியோகிக்க உதவினார். ஏழு வயதில் ‘போலியோ’ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயினால் ஒரு கால் செயலிழக்கவே இவர் நாளடைவில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நிலைமை நேரிட்டது.
“எனக்கு உடலில் வலு இருக்கிறது. அதனால், 2015 முதல் உயிர் மீட்பு சுவாச சிகிச்சை (சிபிஆர்), மாரடைப்பிலிருந்து காக்கும் ‘ஏஇடி’ இயந்திரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான பயிலரங்குகளில் சேர்ந்தேன்,” என அவர் கூறினார்.
இன்று குடியிருப்பாளர்கள் பலரையும் இப்பயிலரங்குகளில் சேர அவர் ஊக்குவிக்கிறார்.
கோ சோக் டோங் எனேபல் விருதுகள் (யுபிஎஸ் சாதனை) 2022ஐப் பெற்றுள்ள பழனிசாமி, பல விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துள்ளார்.