வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை விலை அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெதுவடைந்தது.
குறைவான வீடுகள் விற்கப்பட்டதே இதற்குக் காரணம்.
ஜனவரி மாதத்தில் வீவக மறுவிற்பனை விலை 1.5 விழுக்காடு அதிகரித்தது.
பிப்ரவரி மாதத்தில் அது 0.5 விழுக்காடு மட்டுமே ஏற்றம் கண்டது.
இந்தத் தகவலை சொத்து இணையவாசல்களான 99.co, எஸ்ஆர்எக்ஸ் ஆகியவை மார்ச் 4ல் வெளியிட்டன.
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, மூவறை வீடுளின் மறுவிற்பனை விலை ஆக அதிகமாக 0.9 விழுக்காடு உயர்ந்தது.
அதற்கு அடுத்தபடியாக, எக்செக்கியூட்டிவ் வீடுகளின் மறுவிற்பனை விலை 0.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.
நான்கறை வீடுகளுக்கான மறுவிற்பனை விலை 0.6 விழுக்காடு அதிகரித்தது.
ஐந்தறை வீடுகளுக்கான மறுவிற்பனை விலை 0.4 விழுக்காடு குறைந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஐந்தறை வீடுகளுக்கான மறுவிற்பனை விலை ஆக அதிகமாக 7 விழுக்காடு அதிகரித்தது.
நான்கறை வீடுகளுக்கான மறுவிற்பனை விலை 6.3 விழுக்காடு உயர்ந்தது.
எக்செக்கியூட்டிவ் வீடுகளுக்கான மறுவிற்பனை விலை 6.2 விழுக்காடும் மூவறை வீடுகளுக்கான மறுவிற்பனை விலை 5.4 விழுக்காடும் ஏற்றம் கண்டன.
மறுவிற்பனை விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்த சில மாதங்களில் வீவக மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.