மத்திய சேம நிதி சிறப்புக் கணக்கில் சராசரியாக $2,000 பணத்தைக் கிட்டத்தட்ட 720,000 உறுப்பினர்கள் வைத்திருப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு 55 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் சிறப்புக் கணக்கு மூடப்பட்டால் பாதிக்கப்படக்கூடியவர்கள் இவர்கள்.
நாடாளுமன்றத்தில் அமைச்சின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது உரையாற்றிய அமைச்சர் டான், சிறப்புக் கணக்குகளை இவ்வாறு மூடுவதால் அரசாங்கம் உறுப்பினர்களுக்குத் தரவேண்டிய வட்டித் தொகையைச் சேமிக்க நினைக்கிறது என்று கூறப்பட்டதை நிராகரித்தார்.
“இது கொள்கை தொடர்பானது. அரசாங்கத்திற்கு செலவைக் குறைப்பது தொடர்பானது அன்று,” என்றார் அவர்.
மசே நிதி சிறப்புக் கணக்கை மூடுவது குறித்து துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்தார். அதையடுத்து, இணையத்தில் பலரும் கருத்துரைத்தனர்.
சிறப்புக் கணக்கை மூடுவதால் பாதிக்கப்படுவோர் அதிக வருவாய் ஈட்டும் பிரிவில் இருக்கின்றனர். 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் ஒரு விழுக்காட்டினர் அதாவது 8,400 பேர் மட்டும் தங்களது சேமிப்பை முழுமையாக ஓய்வுக் கணக்கிற்கு மாற்ற இயலாது என்றார் டாக்டர் டான்.
99 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் தொடர்ந்து நீண்டகால அடிப்படையில் அதிக வட்டி விகிதத்தைப் பெறுவர் என்று கூறப்பட்டது.