மொத்தம் 36 கலைஞர்கள், அரங்கை அதிரவைத்த இசை. சிங்கப்பூர் இந்திய பல்லிசை, பாடகர் குழுக்களின் 39வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர்கள் ‘ஸ்பிரிங் ஹார்மனி’ எனப்படும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இசைக் கலைஞர்களின் படைப்பாக்கத்தை வெளிக்காட்ட இசைக் குழு அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை விக்டோரியா அரங்கத்தில் மேடை அமைத்தது.
ஒன்றரை மணி நேரம் பார்வையாளர்கள் இருக்கைகளில் சலிப்பு தட்டாமல் அமர்ந்தபடி கலைஞர்களின் இசை மழையில் நனைந்தனர். தன்னுரிமை மேடைக்கலை நிறுவனமாக இயங்கத் தொடங்கி ஈராண்டுகளான நிலையில், இசைக்குழுவுக்கு இந்நிகழ்ச்சி ஒரு மைல்கல்.
பல்லின கலாசார கூறுகளும் நிகழ்ச்சியில் அடங்கின. உள்ளூர் சீன, மலாய் இசைக் கலைஞர்களுக்கும் இந்திய இசையுடன் சேர்ந்து வாசிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இசைக்குழுவின் நிறுவனர், புத்தாக்கம் மற்றும் நிர்வாக இயக்குநர் லலிதா வைத்தியநாதன் மற்றும் இசைக்குழுவின் நடத்துநர், மூத்த பயிற்றுவிப்பாளர் மற்றும் கலை தலைவர் விக்னேஸ்வரி வடிவழகன் இவ்விருவரும் இசை நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.
இந்தியாவையும் சிங்கப்பூரையும் சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் இசை அமைப்பு நிகழ்ச்சியில் அனைவரையும் மகிழ்வூட்டியது. பலதரப்பட்ட இசை ரசனைக்கு ஏற்றவாறு இசை தொகுக்கப்பட்டது. சமய ஒற்றுமையைப் பறைசாற்றும் சிறப்பு இசைத் தொகுப்பான ‘யூனிட்டி இன் டிவினிட்டி’ பார்வையாளர்களின் காதுகளை எட்டியது.
நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற வட, தென்னிந்திய இசைக் கலவை முத்தாய்ப்பாக அமைந்தது.
நிகழ்ச்சி பற்றி பகிர்ந்த திருமதி லலிதா, “30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் மக்கள் கழகத்துடன் செயல்பட்டோம். கடந்த ஈராண்டுகளாக தன்னுரிமை நிறுவனமாக இயங்குகிறோம். கொவிட்-19 காலத்தில் இது நடந்தது.
“எங்கள் இசைக்குழு வெகுதூரம் பயணித்துள்ளது. எதிர்பாராத விதத்தில் அண்மையில் தெமாசெக் அறநிறுவனம் எங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு உதவ முன்வந்தது. முடிந்தளவு நாங்கள் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முனைகிறோம்.
“தொழில்முறை ரீதியாக நான் ஒரு வேதியியல் விரிவுரையாளராக இருந்தாலும், இசைதான் எனக்கு எல்லாம். இதற்குப் பிறகு இந்த இசைக்குழுவை முன்னெடுத்துச்செல்ல நாங்கள் இளம் தலைமுறையினரை உருவாக்குகிறோம். அதனால் இளம் இசைக்குழுவை அமைக்கத் தொடங்கினோம். இதற்காக எங்களுக்கு அதிக கரங்கள் தேவைப்படுகின்றன,” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தனது பங்கை பற்றி விளக்கிய திருவாட்டி விக்னேஸ்வரி, “கலை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் எனது பங்கு இருக்கும். பயிற்சி அளிப்பது, இசை நிகழ்ச்சி நடத்துவது என நான் பல்வேறு வகைகளில் பங்காற்றி வருகிறேன்.
“இந்தக் குழுவில் நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வந்துள்ளேன். ஓர் உறுப்பினராக சேர்ந்து படிப்படியாக நான் பயிற்றுவிப்பாளரானேன். இசை நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவதில் எனக்கு அலாதி இன்பம்.
“மேற்கத்திய, சீன, மலாய் இசைக் கலைஞர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டியிருந்தது,” என்று குறிப்பிட்டார்.