நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சமூகப் பங்காளிகளுடன் இணைந்து சனிக்கிழமை (மார்ச் 23), வசதி குறைந்த 600 குடும்பங்களுக்கு விழாக்கால அன்பளிப்புப் பைகளை வழங்கியது.
இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில், தீவெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி, பேரீச்சம்பழம் உட்பட உணவு, மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், 120 வெள்ளிக்கான பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டது.
எவ்வித இன பேதமுமின்றி ஏறத்தாழ பத்து பங்காளித்துவ அமைப்புகளின் ஒத்துழைப்புடன், நான்கு முதன்மைத் தொண்டூழியர்கள், பங்காளித்துவ அமைப்புகளைச் சேர்ந்த இளையர்கள் இந்நிகழ்ச்சி வெற்றிபெற உறுதுணையாகச் செயல்பட்டனர்.
“யாரும் பொருளியல் சூழல் காரணமாக பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை எனத் துவண்டுவிடக்கூடாது என்பதுதான் இந்த அன்பளிப்புப் பொருள் வழங்குவதன் நோக்கம்,” என்கிறார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
“கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்த வேண்டும் எனும் இலக்கோடு செயல்படும் இத்திட்டத்தில் கடந்த ஆண்டு வரை 450 குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பையும், 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டன. இவ்வாண்டு தனிநபர் வருமானம் (PCI) 1,000 வெள்ளியிலிருந்து 1,500 வெள்ளியாக உயர்ந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, இவ்வாண்டு பயனாளர்களின் எண்ணிக்கையையும் பற்றுச்சீட்டின் மதிப்பையும் உயர்த்தியுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்தடுத்த முறை, பயனாளர்களின் எண்ணிக்கை உயரும் என நம்புவதாகவும் அவர் சொன்னார்.
இத்திட்டத்தில் பங்களித்திருக்கும் முகம்மது கவுஸ், 57, “அனைவருடனும் இணக்கமாக, இல்லாதோருக்கு வழங்கி வாழவேண்டும் எனும் கருத்தில் சிண்டா இவ்விதத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. சிண்டா போன்ற அமைப்புடன் பங்காளியாகச் செயல்பட்டு சமூகப் பணி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
இத்திட்டத்தில் தொண்டூழியராகப் பணியாற்றிய செல்வகுமார், 55, “இதுபோன்ற அன்பளிப்புப் பைகளை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்வது மனநிறைவு தரும் அனுபவம். பயனாளர்கள், பையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்தகொள்வதைவிட, அதைக் கொண்டுவரும் என்னைப் போன்ற தொண்டூழியர்களிடம் மனம் விட்டு சிரித்துப் பேச முனைகிறார்கள்,” என்று சொன்னார்.
இத்திட்டத்தில் பங்காளியாகச் செயல்பட்ட ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷேக் காதர், “பண்டிகையைத் தனித்துக் கொண்டாடுவதில் மகிழ்வில்லை. நம்மால் இயன்ற வரை பகிர்ந்தளிப்பதால், மகிழ்ச்சி அதிகரிக்கிறது. பிறரின் தேவையை அறிந்து செயலாற்றுவது மனநிறைவு தருகிறது,” என்றார்.