சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.
சிங்கப்பூரில் உலக வனவிலங்கு நிதி அமைப்பு ‘விஸ்மா ஏட்ரியா’ கடைத்தொகுதியில் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
பல்வேறு கலை அம்சங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, சுற்றியுள்ள பகுதிகளில் அத்தியாவசியமற்ற மின் விளக்குகள் ஒரு மணி நேரம் அணைக்கப்பட்டன.
மின்சாரச் சேமிப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் உணர்த்தும் விதமாக இந்த ஒரு மணி நேர விளக்குகளை அணைக்கும் முயற்சி நடைபெறுகிறது.
பங்கேற்பவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம், வெப்பநிலை அதிகரிப்பு, நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றின் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகச் சொல்கிறார் உலக வனவிலங்கு நிதி அமைப்பில் பணியாற்றும் ஜெயஸ்ரீ.
ஒரு நாள் ஒரு மணி நேரம் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைப்பதால் ஏற்படும் தாக்கத்தின் மூலம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் இதைப் பின்பற்றினால் எவ்வளவு நேர்மறை விளைவுகள் ஏற்படும் என்பதைத் தெரியப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்கிறார் அவர்.
உலக வனவிலங்கு நிதி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார், “உலக அளவில் ஏறத்தாழ 190 நாடுகளில் “பூமிக்காக ஒரு மணி நேரம்” நிகழ்வு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் நீடித்த நிலைத்தன்மையும், பருவநிலை மாற்றமும் பேசப்படவேண்டியவை. சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டில் ஆக அதிக வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டதைக் கண்டோம். பல நாடுகளில் தண்ணீர்ப் பிரச்சினைகளில் தொடங்கி, பல உயிரினங்கள் அழிந்துவிட்டதையும், மேலும் பல உயிரினங்கள், அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் பார்க்கிறோம். என்றோ ஒரு நாள் வரும் என நினைத்திருந்த சிக்கல்கள், கண்முன்னே வந்துவிட்டன. இதற்கேற்றபடி நம் வாழ்வை மாற்றியமைப்பது அவசியம்” என வலியுறுத்துகிறார்.
“இதுவரை இழந்ததைக் குறித்து மட்டுமே பேசி கவலையடைவதை விட, இனியும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்கிற நம்பிக்கை அவசியம். அந்த அடிப்படையில்தான் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்”, எனவும் திரு விவேக் தெரிவித்தார்.
“மேலும், சிறுவர்கள் பொதுவாகவே விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிர்கள் என அனைத்தையும் நேசிப்பவர்கள். நீடித்த நிலைத்தன்மைக்காக வாழ்க்கைமுறையை மாற்றியமைப்பதை தியாகம் என்று கருதாமல், உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவே என்ற புரிதலை ஏற்படுத்துவது அவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றும் பரிந்துரைக்கிறார் இவர்.
இந்நிகழ்ச்சியில் பங்காளி நிறுவனங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்கள் சார்பில் இயற்கையான சுத்தம் செய்யும் திரவங்கள் விநியோகிக்கப்பட்டன. பவளப்பாறை, ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும் வனவிலங்குகள் குறித்தும் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்களை சிறுவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.