சிங்கப்பூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 27) பிற்பகல் நேரத்தில் புறஊதா (யூவி) குறியீடு தீவிர நிலையைத் தொட்டது.
பிற்பகல் 12.15 மணிக்கு யூவி குறியீடு 11ஐ தொட்டது. பின்னர் 1.15 மணிவாக்கில் அது 12ஐ தொட்டது. பின்னர் 2.45 மணிக்கு அது 10ஆகக் குறைந்தது.
யூவி குறியீடு குறைந்தாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோல்பூச்சுகளையும் குடைகளையும் பயன்படுத்துமாறு தேசியச் சுற்றுப்புற வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிக வெப்பம் தோல்களில் காயங்களை உண்டாக்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்கும்படியும் அமைப்பு எச்சரித்தது.
யூவி குறியீடு 11க்கு மேல் இருந்தால் அது தீவிரமான நிலை எனப்படும். யூவி குறியீடு 8க்கும் 10க்கும் இடையில் இருந்தால் அது ஆக அதிகம் எனப்படும்.
யூவி குறியீடு ஆக அதிகம், தீவிரமான நிலைகளில் இருந்தால் அவை தோல்களுக்கு பாதிப்புகளை விளைவிக்கும். அதனால் மக்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அமைப்பு கூறியது.
சிங்கப்பூரில் புதன்கிழமை வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியசுக்கும் 35.7 டிகிரி செல்சியசுக்கும் இடையில் பதிவானது. அதிகபட்ச வெப்பநிலை பாய லேபாரில் பதிவானது.
பூமி மீது பதிவாகும் புறஊதா கதிர்வீச்சை கணக்கிடும் முறையை யூவி குறியீடு எனப்படும். யூவி குறியீட்டின் ஆக அதிக நிலை 15.
யூவி குறியீடு அதிகரிக்கத் தொடங்கினால் அது தோல், கண்களைப் பாதிக்கும்.
தோல் பூச்சுகளின் எஸ்பிஎஃப் அளவு குறைந்தது 30ஆக இருக்க வேண்டும். அவற்றை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக யூவி குறியீடு காலை 11 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் இடையில் அதிகமாக இருக்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் யூவி குறியீடு அதிகமாகப் பதிவாகும் காலம்.
கடந்த ஆண்டைவிட சிங்கப்பூரில் இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று அண்மையில் சிங்கப்பூர் வானிலை நிலையம் அறிவித்திருந்தது.
சிங்கப்பூர் வரலாற்றில் ஆக வெப்பமிக்க ஆண்டுகளில் 2023ஆம் ஆண்டு நான்காவது இடத்தில் உள்ளது.
இதற்கிடையே, கடும் வெப்பகாலத்தைச் சமாளிப்பதற்காக மாணவர்கள் அவர்களின் உடற்பயிற்சிக் கல்விச் சீருடையை அணிந்துகொள்ள சில பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன.