கல்வித்துறையில் ஆசிரியர்களைத் தக்கவைத்துக்கொள்ள சம்பளம், வேலைச் சூழல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பை முதலில் வழங்குவது மிக முக்கியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
கற்பித்தல் துறைக்கான 14வது அனைத்துலக மாநாட்டில் திங்கட்கிழமை கலந்துகொண்ட அமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார். சிங்கப்பூர் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் அமைச்சர் சிறப்புரையாற்றினார். ,
“மாணவர்களும் வகுப்பறைகளைத் தாண்டி தங்கள் அறிவை பெருக்க பல வழிகளை நாட வேண்டும். வாழ்வில் வெற்றியடைய வாழ்நாள் கற்றல் மிக அவசியம். தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து இருக்கும் இவ்வுலகில் ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு போன்ற வளங்கள் மூலம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த வேண்டும்.” என்றும் சொன்னார்.
மாணவர்களின் திறன்களை வளர்க்க கல்விக்கு அப்பாற்பட்டு தொடர்ச்சியான கற்றல் மூலம் அவர்கள் வருங்காலத்திற்குத் தேவையான திறன்களை எடுத்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர்,
“திறன்களைக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரையும் முதலில் நன்கு புரிந்துகொண்ட பின்னர் அவர்களின் தேவைகளுக்குத் தகுந்தவாறு கற்பிக்க வேண்டும். சிறப்பாக கற்க சிறந்த குடும்பச் சூழலும் அவசியம்.” என்று வலியுறுத்தினார்.
ஏப்ரல் 22ஆம் தேதி திங்கட்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்ள 18 நாடுகளைச் சேர்ந்த 140 பிரதிநிதிகளும், கல்வி அமைச்சர்களும் சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளனர்.
கல்வித் தலைவர்களான அவர்கள், கற்றலின் எதிர்காலம், கல்வி மற்றும் பயிற்சிக்கு தொழில்நுட்பத்தின் பங்கு, வாழ்நாள் முழுவதும் கற்றலை ஆதரிப்பதற்கு பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் ஆகிய அம்சங்களை ஒட்டி மாநாட்டில் கலந்துரையாடுவார்கள்.
மேலும், சிங்கப்பூர் கல்வி செயல்முறையை ஆழமாக அறிந்துகொள்ளும் விதமாக அவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், உயர்கல்வி நிலையங்கள் மற்றும் இதர பயிற்சி கழகங்களுக்குச் செல்லவுள்ளனர்.
அதில் டேயி உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. அப்பள்ளியில் 11 ஆண்டுகளாகத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஜெய்னுல் பானு மாநாட்டை ஒட்டி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“இதுபோன்ற மாநாடுகள் நடைபெறும்போது ஆசிரியர்களின் பணிகளை மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான கற்றல் முறை இருக்கும். வெளிநாட்டிலிருந்து அவர்கள் சிங்கப்பூருக்கு வரும் போது நாம் மாணவர்களுக்கு மேலும் எவ்வாறு சிறப்பான கல்வி முறையைக் கொண்டு சேர்க்கலாம் என்பதற்கான சிந்தனைத் துளிகள் இந்த மாநாடு மூலம் என்னை போன்ற ஆசிரியர்களுக்குக் கிடைக்கும்.” என்று ஜெய்னுல் பானு கூறினார்.
தேசிய கல்விக் கழகத்திற்குச் சென்றிருந்த பின்லாந்து கல்வி மற்றும் கலாசார அமைச்சின் மாநிலச் செயலாளர் மைக்கேலா நைலேண்டர், “தேசிய கல்விக் கழகத்திற்குச் சென்ற அனுபவம் எனக்கு மிகச் சிறப்பாக இருந்தது. வருங்கால ஆசிரியர்களுக்கு எத்தகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்பதை நான் அறிந்துகொண்டேன்,” என்று சொன்னார்.