சிங்கப்பூரில் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகப் பணியாற்றும் வழக்கறிஞர்களின் திறன் மேம்பாட்டுக்குச் சட்ட அமைச்சு கூடுதல் ஆதரவு வழங்கும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
அவர்களின் தொழில்முறை மேம்பாட்டில் அமைச்சு முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஏப்ரல் 23ஆம் தேதி ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
ஆசிய பசிபிக் சட்ட மாநாடு எனும் இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்ட இவ்வட்டாரச் சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் அமைச்சர் உரையாற்றினார்.
சிங்கப்பூர்ப் பொருளியல் இந்த வட்டாரத்தில் விரிவுகாணும் நிலையில் வர்த்தகங்களை ஈர்க்க முயல்கிறது. இவ்வேளையில், சட்டத்துறை வல்லுநர்கள் சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு முக்கியப் பங்களிப்பர் என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளில், நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசனை வழங்கும் வேலையில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை திரு சண்முகம் சுட்டினார். 2015ல் 3,600ஆக இருந்த அந்த எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 4,800 ஆக உயர்ந்துள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்களைக் குறிப்பிட்ட அமைச்சர், ஆசிய பசிபிக் வட்டார நாடுகள் தொடர்ந்து வளர்ச்சிகாணும் என்றார்.
வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கையில் சட்டப் பணிகளும் அதிகரிக்கும் என்று கூறிய அமைச்சர் சண்முகம், சட்ட அமைச்சு அதுதொடர்பான திறன் மேம்பாட்டுக்குக் கைகொடுக்கும் என்றார்.