செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களால் பாதிக்கப்படும் அலுவலக ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டப்போவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உறுதியளித்துள்ளது.
நிபுணர்கள், மேலாளர்கள், அதிகாரிகள் (பிஎம்இஸ்) ஆகியோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் முயற்சியில் தாங்கள் இறங்கியுள்ளதாக என்டியுசி வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) தெரிவித்தது. தங்களுடன் தொடர்புடைய ஊழியர் குழுக்களுடன் இணைந்து இந்நடவடிக்கையை எடுத்து வருவதாக அது குறிப்பிட்டது.
வேலையிட சமத்துவம் மற்றும் பாதுகாப்பு, வேலை முன்னேற்றம், வேலை தேடித் தருவது போன்ற அம்சங்களில் அவ்வாறு செய்வதாக என்டியுசி சொன்னது. தற்போது என்டியுசியின் உறுப்பினர்களில் 45 விழுக்காட்டினர் நிபுணர்கள், மேலாளர்கள், அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வேலை வாய்ப்பு, வேலை தொடர்பான பயிற்சிகள், வேலை பறிபோவதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது ஆகிய அம்சங்களில் நிபுணர்கள், மேலாளர்கள், அதிகாரிகள் கூடுதல் ஆதரவை நாடுவது தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக என்டியுசி கூறியது. கலந்துரையாடல்கள், தொழிற்சங்கத் தொடர்பு நடவடிக்கைகள் போன்றவற்றின் வாயிலாக இதைத் தெரிந்துகொண்டதாக என்டியுசி குறிப்பிட்டது.
“பிஎம்இ ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து நமது ஊழியரணியில் முக்கியப் பங்கு வகிக்கும். வேலை பாதுகாப்பு, வேலை முன்னேற்றம், வேலை தேடித் தருவது ஆகிய அம்சங்களில் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.
என்டியுசி, உணவு, பானங்கள் சார்புத் தொழிலாளர்கள் சங்கம் (ஃபுட், ட்ரிங்க்ஸ், எலைட் வொர்க்கர்ஸ் யூனியன்) ஆகிய இரண்டும் மின்வர்த்தக நிறுவனமான லசாடா அண்மையில் ஆட்குறைப்பு செய்த ஊழியரணி உறுப்பினர்களுக்கு உதவி வருவதாகவும் திரு இங் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அலிபாபா குரூப் ஹோல்டிங் குழுமத்துக்குச் சொந்தமான லசாடா, சிங்கப்பூரில் இயங்கிய அதன் ஊழியர்கள் சிலரை இவ்வாண்டு ஜனவரி மாதம் ஆட்குறைப்பு செய்தது. ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
எல்லா நிலைகளிலும் உள்ள ஊழியர்களுக்கு நேரடி ஆதரவு வழங்கவேண்டும் என்பதே லசாடா விவகாரத்தில் தொழிற்சங்கம் கற்றுக்கொண்டது என்றும் திரு இங் சொன்னார்.