கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு, சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து பழைய நிலையை நெருங்குகிறது. இதனால் விமானப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில், விமான ஓடுபாதை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கொக் ஜுவான் ஏப்ரல் 26ஆம் தேதியன்று வலியுறுத்தினார்.
ஆணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கருத்தரங்கில் திரு ஹான் இதுகுறித்து பேசினார்.
இந்தக் கருத்தரங்கு சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரௌன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது.
சாங்கி விமான நிலையம் வழியாகப் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 16.5 மில்லியனாகப் பதிவானது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முந்தைய நிலையைவிட காலாண்டு அடிப்படையில் அதிகப் பயணிகள் பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு விமான நிலைய ஊழியர்களின் வேலைப்பளுவை கூடுதலாக்கும் என்றும் அவர்களது வேலை மேலும் தீவிரமடையும் என்றும் திரு ஹான் எச்சரித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு, குறைந்த அனுபவம் உள்ள ஊழியரணி புதிய சவால்களை எதிர்கொள்ளும் என்றார் திரு ஹான். வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், போர் காரணமாக விமானப் போக்குவரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை அவர் உதாரணம் காட்டினார்.
கருத்தரங்கில் விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 முக்கிய ஊழியர்களிடம் திரு ஹான் பேசினார்.