இவ்வாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் சுமார் 2,000 மின்சார வாகன மின்னூட்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதிக்குள் பதிவுசெய்தால் மட்டுமே தற்போது விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்பட்டுவரும் மின்னூட்டிகளைத் தொடர்ந்து உபயோகிக்கமுடியும். மின்சார வாகன மின்னூட்டல் தொடர்பில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதியன்று நடப்புக்கு வந்த சட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
இந்நிலையில், மின்னூட்டிகள் வேகமாகப் பதிவுசெய்யப்பட்டு வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
இதுவரை புதிவுசெய்யப்பட்ட மின்சார வாகன மின்னூட்டிகளில் பாதி, தனிநபர்களுக்குச் சொந்தமானவை என்றும் மற்றவை மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் போன்றவற்றுக்குச் சொந்தமானவை என்றும் ஆணையம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
புதிய மின்னூட்டிகளும் பதிவுசெய்யப்படவேண்டும். பதிவுசெய்யப்பட்ட மின்னூட்டிகளுக்கு அதிகாரபூர்வ ஒட்டுவில்லைகள் வழங்கப்படும்.
பதிவுசெய்யப்படாத மின்னூட்டியைப் பயன்படுத்தும் உரிமையாளருக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மின்னூட்டிகளைப் பதிவுசெய்வதற்கான கட்டணம் $750. ஜூன் ஏழாம் தேதிக்குள் பதிவுசெய்வோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.