மலைப்பாம்பு ஒன்று சாலை நடுவே ஊர்ந்தபடி வாகனங்களின் டயர்களைப் பாய்ந்து கடிக்க முயல்வதை ஏப்ரல் 27ஆம் தேதி தெக் வாய் வட்டாரவாசிகள் சிலர் பார்த்தனர்.
இரவு 10.45 மணியளவில் தெக் வாய் லேன் புளோக் 136 அருகே உள்ள இருதட சாலையின் நடுவே அந்த இரண்டு மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு குறைந்தது ஐந்து வாகனங்களை இவ்வாறு குறிவைத்தது.
பாம்பின் வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்ததாகவும் பூனை அளவில் ஏதோ ஒரு விலங்கை அது சாப்பிட்டுள்ளது என்று தமக்குத் தோன்றியதாகவும் சம்பவ இடத்தில் உள்ள ஒருவர் கூறினார்.
இதையடுத்து, அப்பகுதிக்குக் காவல்துறையினரும் தொடர்ந்து ஏக்கர்ஸ் அமைப்பைச் சேர்ந்தோரும் வந்தனர்.
சாப்பிட்ட பின் மந்தநிலையில் இருந்த காரணத்தால் மலைப்பாம்பு தன்னைத் தற்காத்துக்கொள்ள இவ்வாறு நகரும் வாகனங்களைக் குறிவைத்துக் கடித்திருக்கலாம் என்று ஏக்கர்ஸ் அமைப்பின் இணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன் கூறினார்.
மலைப்பாம்புக்கு ஏற்ற ஒரு சூழலில் அது விடுவிக்கப்படும் என்று ஏக்கர்ஸ் தெரிவித்தது.