கோலாலம்பூர்: கோழிக்கூண்டினுள் புகுந்த 5.4 மீட்டர் நீள மலைப்பாம்பை மலேசியாவின் ஹூலு திரெங்கானு குடிமைத் தற்காப்புப் படையினர் பிடித்தனர்.
திரெங்கானுவிலுள்ள பெலண்டான் எனும் சிற்றூரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) இச்சம்பவம் நிகழ்ந்தது.
அவ்வூர்வாசி ஒருவர் தமது கோழிக்கூண்டினுள் பெரிய பாம்பு ஒன்று இருப்பதாகக் கூறி, காலை 7.45 மணியளவில் தகவல் தந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி முகம்மது ஸப்ரி அப்துல் ரசாக் கூறினார்.
இதனையடுத்து, குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அறுவர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறப்புக் கருவியின் துணைகொண்டு, பத்து நிமிடம் போராடி அவர்கள் அந்த அந்த மலைப்பாம்பைப் பிடித்தனர்.
அதன் எடை 120 கிலோ என பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.
“தமது கோழிக்கூண்டிற்கு உள்ளிருந்து சத்தம் கேட்டதையடுத்து, அந்த ஆடவர் அதனைத் திறந்து பார்த்தார். அப்போது, உள்ளே மலைப்பாம்பு இருந்ததை அவர் கண்டார்.
“பிடிபட்ட மலைப்பாம்பு தற்காலிகமாக ஒரு கூண்டில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அது வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும்,” என்று திரு ரசாக் சொன்னார்.