சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பில் சிறப்பான, அரிதான ஒன்றைக் கொண்டுள்ளனர். மக்கள் தொடர்ந்து மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) அதிகாரம் கொடுத்துள்ளனர். பதிலுக்கு அந்தக் கட்சி பாதுகாப்பு தொடங்கி வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், பொருளியல் வரை அனைத்திலும் தலைசிறந்த முன்னேற்றத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
“சிங்கப்பூரில் அது செயல்பட்ட விதம் மிகவும் தனித்துவமானது. உலகில் வேறு எங்கும் காணமுடியாதது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
உடன்படுதல், அதிகாரம், கட்டுப்பாடு உள்ளது. நிலையான தொடர்ச்சியும் உள்ளது. இது குறிப்பிடத்தக்கதாகும். அதை விட்டுவிட்டால், ஒருபோதும் மீண்டும் பெறமுடியாது.
ஆளும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரான திரு லீ, இஸ்தானாவில் சிங்கப்பூர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில், இந்த நிலை மற்ற நாட்டுத் தலைவர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
இந்த அமைப்பு நல்ல அரசியலின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நல்லாட்சி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அனுமதித்துள்ளது. இதனால் மக்கள் பயன்பெறும் நல்ல கொள்கைகளை செயல்படுத்த முடியும் என்றார் அவர்.
காலப்போக்கில், பொருளியல் வளர்ச்சியிலும் வாழ்க்கையின் பல அம்சங்களிலும் நீண்ட கால நோக்கில் திட்டமிட இந்த அமைப்பு அரசாங்கத்தை அனுமதித்துள்ளது என்று பிரதமர் லீ கூறினார்.
ஆனால் இந்த அமைப்பு முறை தொடர்ந்து செயல்பட, வாக்காளர்கள் தங்கள் நலன்கள் எங்கே உள்ளன என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கக்கூடிய அரசாங்கத்திற்கு வாக்களிப்பது முக்கியம்.
வாக்காளர்கள் மசெக ஆட்சியமைக்க வேண்டும், அதே[Ϟ]நேரத்தில் அதிக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைச் சரிபார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்பும்போது இந்த முறை சிதைந்துவிடலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
“அந்த வழியில் சிறந்த செயல்பாட்டைப் பெறமுடியும் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில், மக்களுக்குச் சேவையாற்றும் அரசாங்கத்தின் ஆற்றலை அது பலவீனப்படுத்தும்,” என்றார் அவர்.
“அரசியலைக் கையாள்வதில் அதிக நேரம் செலவிடப்படும். இப்போதுள்ள நிலை இது. ஏனென்றால் அரசியலில் வெற்றி பெற வேண்டும், இல்லையெனில் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாது,” என்று அவர் விளக்கினார்.
தற்போது நாடாளுமன்றத்தில் அதிக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால்-பாட்டாளிக் கட்சியில் எட்டுப் பேர், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் இருவர்- விவாதங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக வருவதாலும், ஒருங்கிணைக்கப்படுவதாலும், விவாதத்தின் தரம் மேம்பட்டுள்ளது என்றும் பிரதமர் லீ சுட்டினார்.
ஆனால் இது மக்கள் பிரச்சினைகளை அல்லது மேம்பட்ட கொள்கைகளை நன்கு புரிந்துகொள்ள உதவியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.
சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் அல்லாதவற்றில் எதிர்க்கட்சிகள் நல்ல யோசனைகளைத் தெரிவித்துள்ளன. ஆனால், மற்ற பல முக்கியமான பிரச்சினைகள் இயல்பாகவே சில அரசியல் சாயல்களைக் கொண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் அவற்றைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிர்ப்பைச் சம்பாதிக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளில், ஓர் இலக்கை, ஆக்கபூர்வமான விவாதத்தை அடைவது கடினம் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் சிறப்பாக ஆட்சி நடத்த நீங்கள் உதவி செய்தால், விளைவு சிறப்பாக இருக்கும். அடுத்த முறை நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை மேலும் கடினமாக்குகிறீர்கள்.
“எனவே, குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதே முக்கியமானதாக உள்ளது. இதில் பாதகமான விளைவு இருக்கும்.
“இந்தப் போக்கு நீண்ட காலத்துக்கு நீடித்தால், காலப்போக்கில் இது நிச்சயமாக சிங்கப்பூரின் அரசியல் அமைப்பையோ, அரசாங்கத்தையோ, அல்லது கொள்கைகளையோகூட பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். இது சிங்கப்பூருக்கு வித்தியாசமான பாதையாக இருக்கும். இது சிங்கப்பூருக்கு ஆபத்து. இதை சிங்கப்பூரர்கள் எப்போதும் புரிந்துகொள்வதில்லை,” என்றார் பிரதமர் லீ.
இப்போதைக்கு, எதிர்க்கட்சியினர் “கண்காணிப்பாளராக செயல்பட தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்”, அரசாங்கத்தை மிகவும் வெளிப்படையானதாக ஆக்குவார்கள், கொள்கைகளை மேம்படுத்துவார்கள் அல்லது பிரபலமில்லாத கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்வார்கள் என்று சிங்கப்பூரர்கள் நம்புகிறார்கள்.
“இந்த அம்சத்தில் அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் அவை உண்மையில் கொள்கைகளின் தரத்தை உயர்த்த முடியுமா என்பது குறித்து, என் கருத்து உண்டு,” என்றார் திரு லீ.
கோட்பாடு ரீதியாக, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் பெரும்பாலும் திறன்களின் ஒத்து இருக்கும் சூழ்நிலையை கொண்டிருக்கமுடியும் என்று பிரதமர் லீ கூறினார்.
எதிர்க்கட்சிகள் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க விரும்புகிறது, அவர்களுக்கு சிறந்த அரசியலை அடைவதற்கான வழி இதுதான்; அவர்கள் மசெகவுக்கு மாற்றாக இருக்க விரும்புகின்றனர்.
நாம் இந்த நிலையை அடையலாம். ஆனால், இது இன்றைய நிலைமை அல்ல.
இப்போதைக்குப் போதுமான திறமைகள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
“எல்லா இடங்களிலும் திறமைசாலிகள் இருந்தால், நம்மிடம் மென்செஸ்டர் யுனைடெட் ‘ஏ’ என்ற அணியும், லிவர்பூல் ‘பி’ என்ற அணியும் இருந்தால், இது சாத்தியமான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால், எங்களிடம் ஒரே ஒரு அணி மட்டுமே உள்ளது. ஏற்கெனவே ஒரு அணியை உருவாக்குவதே மிகவும் கடினமாக உள்ளது.
“இன்று, மக்கள் செயல் கட்சி வழங்கும் குழு, நாங்கள் வழங்கும் அரசாங்கத்தின் தரம், எதிர்க்கட்சியால் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அவர்களால் நிச்சயமாக அதைச் சாதிக்க முடியாது.”
எதிர்க்கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் லீ, தேர்தல் முறையில் ஒவ்வொரு கட்சியும் ஒருநாள் அரசாங்கத்தை அமைப்பதாகவே இருக்க வேண்டும் என்றார்.
ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிபெற மசெக தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் கூறினார்.
“மக்களின் அதிகாரத்தைத் தொடர்ந்து பெறுவதையும் பதவி வகிப்பதையும் மாறுபட்ட முறையில் மாறுபட்ட தலைமுறை மூலம் உறுதி செய்ய மசெக என்ற முறையில் நாங்கள் மிகவும் கடுமையாக முயற்சிப்போம்,” என்றார் அவர்.
ஒருநாள் மசெக அல்லாத அரசாங்கத்தை காணமுடியும் என கருதுகிறாரா என்று கேள்விக்கு, 20 ஆண்டுகளில் அது நடக்கலாம் என்றார்.
“மசெக மக்களைக் கைவிட்டு, எதிர்க்கட்சியினர் மேலும் வலுவாகி, மேலும் சிறந்த மாற்றாக அமையும்போது அது நடக்கலாம்,” என்றார் அவர்.
“அத்தகைய சூழ்நிலையில் நான் மசெகவுக்காக வருத்தப்படுவேன், ஆனால் சிங்கப்பூருக்கு எதிர்க்கட்சிக்கு வாக்களியுங்கள், நாட்டை கவனித்துக்கொள்ள சிறந்த அணிக்கு வாக்களியுங்கள், நீங்கள் வெற்றி பெற வேண்டும்,” என்றே கூறுவேன் என்றார் திரு லீ.