எளிதில் பணம் ஈட்ட வேண்டும் என்பதற்காகப் பதின்ம வயதுடைய இருவர், பாலியல் சேவை வழங்கும் மோசடி ஒன்றில் ஈடுபட்டனர்.
பாலியல் சேவைகள் வழங்குவதாக 15 முதல் 20 பேரை ஏமாற்றி, சுமார் $1,500 மதிப்பில் மோசடி செய்ததன் தொடர்பில் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
இருவரில் 19 வயதுடைய ஆடவர், டிசம்பர் 20ஆம் தேதியன்று தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மற்றொருவரான 17 வயது இளம்பெண், டிசம்பர் 22ஆம் தேதியன்று தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
இருவரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இணையத்தில் கிடைத்த பெண்களின் புகைப்படங்களை இருவரும் ‘டெலிகிராம்’ தளத்தில் பதிவேற்றம் செய்து தாங்கள் வழங்கும் பாலியல் சேவைகள் குறித்து விளம்பரம் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சந்திப்புக்குமுன் இருவரும் முன்பணமாக $10 முதல் $50 வரை ஆடவரின் ‘பேநவ்’ கணக்குக்கு மாற்றிவிடுமாறு கோரியதாகவும் சந்திக்க வருபவரிடம் இன்னும் அதிகப் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், பணம் தந்தோருடன் இருவரும் தங்களின் தொடர்பைத் துண்டித்துக்கொண்டனர்.
ஆடவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு அறிக்கை கோரப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 31ஆம் தேதியன்று தண்டனை விதிப்புக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.