சுகாதார அறிவியல் ஆணையத்தின் கீழ் உள்ள மின் சிகரெட் உள்ளிட்ட விவகாரங்களை விசாரிக்கும் தனியார் நிறுவனத்தின் விசாரணை அதிகாரி, பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தும் போது பாலியல் சேவையை லஞ்சமாகப் பெற முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
சைனி இப்ராஹிம் என்ற அந்த விசாரணை அதிகாரி விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நடந்துகொள்ள அக்குற்றத்தை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இப்ராஹிம் மூன்று பெண்களிடம் இந்த குற்றச் செயல்களை செய்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு சந்தேகப்படுகிறது.
தற்போது ஆடவர் விசாரணை அதிகாரி பணியில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
54 வயதான இப்ராஹிம் சிங்கப்பூரர் என்றும் அவர் மீது மோசடி, பெண்களின் மானத்திற்கு பங்கம் விளைவித்தது, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நபர்களின் தனிநபர் அடையாளங்களைக் காக்கும் விதமாக மூன்று பெண்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இப்ராஹிம் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மோசடிக் குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, $100,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
மானபங்கக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்படலாம்.