ஒருவர் குற்றம் இழைத்ததாகக் கூறி, அதற்காகப் பணம் செலுத்தக் கூறி மிரட்டினால், அது கட்டாயம் உண்மையாக இருக்காது என எச்சரிக்கின்றனர் சிங்கப்பூர் காவல் துறையினர்.
“தொலைபேசி, குறுஞ்செய்தி, சமூக ஊடகம் வழியே, வங்கிக் கணக்கு விவரம், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் மறைச்சொல் உள்ளிட்ட எந்த தனிப்பட்ட தகவல்களையும் காவல்துறையினரோ, வேறு எந்த அரசாங்க அதிகாரியோ கேட்பதில்லை” என எச்சரிக்கிறார் மோசடி கல்வி அலுவலக செயல்பாட்டுத் துறையின் உதவி இயக்குநரான காவல்துறை கண்காணிப்பாளர் ரோஸி ஆன் மெக்கின்டைர்.
இவ்வாறு கடந்த ஆண்டில் அதிகாரிகள் போல பேசி, மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றனர் காவல் துறையினர்.
எப்படி நடந்தன?
- குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம், சீன நாட்டுக் காவல்துறை அதிகாரிகளைப் போல தொலைபேசி மூலம் பேசி, 19 வயது மாது ஒருவரை மிரட்டிப் பணம் பறித்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நடந்தது. சீனாவில், கள்ளப் பண மோசடியில் அவர் ஈடுபட்டதாக நம்பவைத்து, அதிலிருந்து பிணையில் விடுபடவும், வழக்கைத் தீர்க்கவும் 230 ஆயிரம் வெள்ளிக்கும் மேற்பட்ட பணத்தைப் பெற்றுள்ளனர் மோசடிப் பேர்வழிகள். அப்பெண்ணை மோசடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளி பதிவு செய்யச் சொல்லி, பின் அதே காணொளியை வைத்து அவரது பெற்றோரையும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் அம்மோசடி பேர்வழிகள். இதன் தொடர்பில், முறையே 21, 25 வயதான சந்தேகத்துக்குரிய இரு நபர்களைக் காவல்துறை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தது.
- இதேபோல, கடந்த நவம்பர் மாதம், 79 வயதான மூதாட்டியை காவல்துறையினர் போல பேசி, அவரது முதலீடுகளை பணமாக்கி, தங்கள் வங்கி கணக்குக்கு மாற்ற வைத்துள்ளனர் மோசடிக் கும்பலைச் சேர்ந்தோர். விரைந்து செயல்பட்ட காவல்துறையின் மோசடித் தடுப்புப் பிரிவினர், செலுத்தப்பட்ட வங்கிக் கணக்குளை முடக்கி 260 ஆயிரம் வெள்ளிப் பணம் பறிபோகாமல் மீட்டனர்.
- கடந்த மார்ச் 9 அன்று 82 வயதான மூத்தோருக்கு உதவுவதாகக் கூறி வங்கிக்கு அழைத்து வந்தார் 20 வயது ஆடவர். ஏறத்தாழ 1.2 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள பணத்தை ஏமாற்றிப் பெற முயன்ற அவரையும் வங்கி அதிகாரிகளின் உதவியோடு காவல்துறை கைது செய்தது.
“வெளிநாட்டுக் காவல்துறை, சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுமதியின்றி யார் மீதும் நடவடிக்கை எடுக்கவோ, கைது செய்யவோ, விசாரணை மேற்கொள்ளவோ இயலாது. இவ்வாறு பேசி மிரட்டுபவர்களிடம் விழிப்புடன் இருங்கள்” என எச்சரிக்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர்.