இஸ்தான்புல்: முதன்முறையாக ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை (சாம்பியன்ஸ் லீக்) வென்று சாதித்துள்ளது இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சிங்கப்பூர் நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த இறுதிப் போட்டியில் சிட்டி குழு 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியின் இன்டர் மிலான் குழுவைப் போராடி வீழ்த்தியது.
ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் விழுந்த அந்த ஒரே கோலை அடித்தவர் ஸ்பானிய ஆட்டக்காரரான ரோட்ரி ஹெர்னாண்டஸ்.
போட்டிக்குப்பின் பேசிய சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, “வெற்றிபெற மிகக் கடினமாக இருந்தது,” என்றார்.
“எங்கள் குழுவினர் மிகச் சிறப்பாக விளையாடினர். பொறுமையாக இருக்கும்படி ஆட்ட இடைவேளையின்போது அவர்களிடம் சொன்னேன். இந்த ஆட்டம் ஒரு நாணயம் போன்றது என்பதால் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்பட்டது.
“இந்த வெற்றி நட்சத்திரங்களில் எழுதப்பட்டிருந்தது. அது எமக்கே சொந்தம்,” என்றார் கார்டியோலா.
இதனையடுத்து, இந்த 2022-23 பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், வெற்றியாளர் கிண்ணம் என மூன்று தொடர்களில் வாகைசூடி, சிட்டி குழு வரலாறு படைத்திருக்கிறது.
அத்துடன், ஒரு நிர்வாகியாக கார்டியோலா வெற்றியாளர் கிண்ணத்தை வென்றிருப்பது இது மூன்றாவது முறை. முன்னதாக, 2009, 2011ஆம் ஆண்டுகளில் பார்சிலோனா குழு சார்பில் அவர் இதனைச் சாதித்துக் காட்டியிருந்தார்.