அகமதாபாத்: உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெற்றி ஓட்டத்தை ஆஸ்திரேலியா எடுத்ததும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
குளம்போல் கண்ணீர் தேங்கிய கண்களுடன் உடனே திடலைவிட்டுச் சென்றார் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா.
தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பத்துப் போட்டிகளாகத் தோல்வியே காணாமல் வீறுநடை போட்ட நிலையில், இறுதிப் போட்டியில் தோற்று கிண்ணத்தைப் பறிகொடுத்தது வீரர்களை உணர்வுபூர்வமாக மனந்தளரச் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டார் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநர் ராகுல் டிராவிட்.
“ரோகித் சர்மா உட்பட அனைவருமே ஏமாற்றமடைந்தனர். உடை மாற்றும் அறையே உணர்வுமயமாகக் காட்சியளித்தது. வீரர்கள் அனைவரும் எவ்வளவு கடினமாக உழைத்தனர், எத்தனை தியாகங்களைச் செய்தனர் என்பது தெரியுமாதலால் ஒரு பயிற்றுநராக அவர்களைப் பார்க்கவே எனக்குக் கடினமாக இருந்தது,” என்று டிராவிட் சொன்னார்.
இருபதாண்டுகளுக்குமுன் நடந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றுப்போனது. அப்போதைய இந்திய அணியில் ஒரு வீரராக இடம்பெற்றிருந்தார் டிராவிட்.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் பந்தடிப்பிலும் பந்துவீச்சிலும் மிளிர்ந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் இரண்டிலுமே சோடைபோனது.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 397 ஓட்டங்களைக் குவித்து புதிய சாதனை படைத்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் 240 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
முதல் சுற்றில் இலங்கையை 55 ஓட்டங்களுக்கும் தென்னாப்பிரிக்காவை 83 ஓட்டங்களுக்கும் சுருட்டிய இந்தியப் பந்துவீச்சாளர்கள், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்முன் எடுபடாமல் போயினர். 137 ஓட்டங்களை விளாசி மிரளவைத்தார் ஹெட்.
ஆயினும், “இதுதான் விளையாட்டு. இப்படியெல்லாம் நடக்கும். அன்றைய நாளில் சிறப்பாகச் செயல்படும் அணி வெற்றிபெறும்,” என்று கூறி, டிராவிட் தன்னைத்தானே தேற்றிக்கொண்டார்.
ஆதலால், இதனுடன் நின்றுவிடாமல், மறுநாளும் சூரியன் உதிக்கும் என்ற நம்பிக்கையுடன், தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்றும் டிராவிட் கேட்டுக்கொண்டார்.