மிர்பூர்: நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது விளையாட்டாளர்கள் மோதிக்கொண்டதில் அறுவர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பங்ளாதேஷின் மிர்பூர் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்ற அந்த மூன்று நாள் போட்டித்தொடர் அங்குள்ள ஷகீத் சுரவார்டி உள்ளரங்கில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமையன்று முகம்மது முஸ்தபா கமால் ராஸ் அணியும் திபங்கர் திப்பன் அணியும் பொருதியது.
அப்போது, பவுண்டரி குறித்த நடுவரின் முடிவு தொடர்பில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறையில் முடிந்தது.
அறை, குத்து என ஒருவருக்கொருவர் மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். இருதரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் நாற்காலிகளையும் தூக்கி வீசினர்.
ராஸ் அணியினர் வெளியிலிருந்து ஆள்களை அழைத்து வந்து தாக்கியதாக, திபங்கர் அணியைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, அந்த நட்புமுறை போட்டித் தொடர் ரத்துசெய்யப்பட்டது.
இம்மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்குபெறும் பங்ளாதேஷ் அணிக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் நட்சத்திரங்கள் பங்கேற்கும் போட்டித் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.