ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தானாவிற்கு ரசிகர் பட்டாளமே உண்டு.
ஆயினும், ஹாங்ஜோவில் ஆசிய கிண்ணப் போட்டிகளின்போது இப்படி ஓர் ரசிகரை அவர் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.
மந்தானாவின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகச் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து 1,200 கிலோமீட்டர் பயணம் செய்து, ஹாங்ஜோவிற்கு வந்திருந்தார் ஜுன் யு என்ற அந்த இளையர்.
சீனாவில் கிரிக்கெட் விளையாட்டு குறித்துப் பெரும்பான்மையோர் அறிந்திருக்க மாட்டார்கள். இப்படியிருக்க, யூடியூப் காணொளிகள் வழியாக கிரிக்கெட்டில் மூழ்கினார் ஜுன் யு.
சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி, மந்தானா - இம்மூவரே யுவிற்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் விளையாட்டாளர்கள்.
“2019 உலகக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஜஸ்பிரீத் பும்ரா மிகச் சிறப்பாகப் பந்துவீசியதைக் கண்டேன். ரோகித் சர்மாவையும் கோஹ்லியையும் பின்தொடர்கிறேன். அவர்களே இப்போதைக்குத் தலைசிறந்த ஆட்டக்காரர்கள். அடுத்ததாக, சூர்யகுமார் யாதவும் பும்ராவும்,” என்றார் யு.
இந்தியா-இலங்கை அணிகள் மோதிய இறுதிப் போட்டிக்குப்பின் ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்திடம் அவர் இவ்வாறு கூறினார்.
போட்டியின்போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்தபடி ‘மந்தானா கிரிக்கெட்டின் தேவி’ என்ற பதாகையை அவர் கையில் ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் யு, அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதன்கிழமை தொடங்கும் ஆண்கள் கிரிக்கெட்டையும் காண ஆர்வம் கொண்டுள்ளார்.
ஆனாலும், படிப்பு தடைபட்டுவிடும் என்பதால் செவ்வாய்க்கிழமையே பெய்ஜிங் திரும்புவதாக அவர் சொன்னார்.
மந்தானாவின் ஆட்டத்தைக் காண்பதற்காக 1,000 யுவான் (S$189, ரூ.11,400) செலவு செய்த யு, நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனே தமது மனங்கவர்ந்த ஆட்டக்காரர் என்கிறார்.