லிவர்பூல்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்கெதிராக ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் லிவர்பூல் குழு 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் பருவத்துடன் லிவர்பூல் குழுவின் நிர்வாகிப் பதவியிலிருந்து விலகும் தனது முடிவில் மாற்றமில்லை என்று யர்கன் கிளோப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் லிவர்பூல் நிர்வாகிப் பொறுப்பிலிருந்து விலகும் தமது முடிவு குறித்து கிளோப் அறிவித்தார்.
ஆயினும், அதன்பின் நடந்த ஆட்டங்களில் லிவர்பூல் குழு சிறப்பாகச் செயல்பட்ட ஒவ்வொரு முறையும், ‘பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா?’ என்ற கேள்வி கிளோப்பிடம் தவறாமல் கேட்கப்பட்டு வந்தது.
“உண்மையிலேயே இது மிகவும் விசித்திரமாக உள்ளது. எனது முடிவு குறித்து விளக்க முயன்றாலும் யாரும் புரிந்துகொள்வது இல்லை,” என்று கிளோப் தெரிவித்துள்ளார்.
தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாம் நிலையிலுள்ள லிவர்பூல், இப்பருவத்தையும் அதே நிலையிலேயே முடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்ற ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டி 5-1 என்ற கோல் கணக்கில் உல்வ்ஸ் குழுவையும், செல்சி 5-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டையும் வீழ்த்தின.