காலே: இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி 72 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா இந்த மைல்கல் சாதனையை காலேவில் நடைபெற்று வந்த அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று முன்தினம் நிகழ்த்தினார்.
அப்போது, ஆசிய கண்டத்தில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராகவும் அவர் உள்ளார்.
31 வயதான பிரபாத் ஜெயசூர்யா தனது 7வது டெஸ்ட் போட்டியில், அயர்லாந்து பந்தடிப்பாளர் பால் ஸ்டெர்லிங்கை ஆட்டமிழக்கச் செய்தபோது இந்த சாதனைகளைப் படைத்தார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் ரிச்சர்ட்சன், தென் ஆப்பிரிக்காவின் வெர்னன் பிலாண்டர் ஆகியோருடன் பிரபாத் ஜெயசூர்யா 2வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 1951ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ஃப் வாலண்டைன் எட்டுப் போட்டிகளில் 50 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்ததே சாதனையாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளைப் கைப்பற்றி யவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் டர்னர் முதலிடத்தில் உள்ளார். அவர், 1888ஆம் ஆண்டு ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது.