மும்பை: சூர்யகுமார் யாதவ் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
16வது ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் டு பிளஸ்ஸி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பூவா தலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பந்தடித்த பெங்களூரு அணிக்கு டு பிளஸ்ஸி 65 ஓட்டங்களும் மேக்ஸ்வெல் 68 ஓட்டங்களும் எடுத்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தது.
இதன்பின் 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைத் துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 7 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தாலும் மற்றொரு துவக்க வீரரான இஷான் கிஷன் 21 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் தந்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த நேகால் வதேரா - சூர்யகுமார் யாதவ் இணை, பெங்களூர் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. வான்கடே திடலில் வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 83 ஓட்டங்களும் நேகால் வதேரா 34 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்தனர். அதனால் 16.3 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
26 பந்துகளில் அரை சதம் எட்டிய சூர்யகுமார் யாதவ்வை வீழ்த்த பெங்களூர் அணி எடுத்த முயற்சிகளுக்குப் பலன் கிட்டவில்லை. அதனால் அவரது வாணவேடிக்கை தொடர்ந்தது. 35 பந்துகளில் 6 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்களை அவர் குவித்தார். பெங்களூரு அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்புத் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் கால் பதித்துள்ளது.