சென்னை: சென்னை சேப்பாக்கம் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்விக்கு, மூன்று வீரர்களை முன்னேற்ற அணித் தலைவர் டோனி எடுத்த முயற்சியும் ஒரு காரணம் என்ற விமர்சனம் எழுந்து உள்ளது.
போட்டி முடிந்ததுமே பேசிய டோனி, பூவா தலையாவில் தவறான முடிவு எடுக்கப்பட்டது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறியிருந்தார்.
பனிப்பொழிவு இருக்காது என்ற நினைப்பில் பந்தடிப்பைத் தேர்வு செய்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதியில் அதிகப் பனிப்பொழிவு ஏற்பட்டு தமது அணியின் பந்துவீச்சுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக பூவா தலையாவில் வென்ற டோனி பந்தடிப்பைத் தேர்வு செய்து ஆட்டத்திலும் வென்றார்.
ஆயினும், இதெல்லாம் முக்கிய காரணமில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சென்னை அணியின் தலைசிறந்த பந்தடிப்பாளர்களான ருதுராஜ், டேவோன் கான்வே, ரஹானே மற்றும் சிவம் துபே நல்ல ஃபார்மில் உள்ளனர். அவர்களைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால், நடுவில் ஆடக்கூடிய ராயுடு, ஜடேஜா மற்றும் மொயின் அலி ஃபார்மில் இல்லாததால் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள்.
குறிப்பாக, ராயுடு 10 போட்டிகளில் 122 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தடுமாறி வருகிறார். அதேபோல ஜடேஜாவின் மோசமான பந்தடிப்பு கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது.
விமர்சனங்களைப் பொருட்படுத்தாத டோனி, இந்த மூவரையும் ஃபார்முக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்ததாக சில ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற டெல்லி அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் டோனி இந்த சோதனை முயற்சியைக் கைவிட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
காரணம், கோல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இந்த மூவரும் மோசமாக விளையாடி டோனியை ஏமாற்றிவிட்டனர்.