இத்தாலியக் காற்பந்துக் குழுவான ரோமா, சிங்கப்பூரில் நடைபெறும் காற்பந்துத் திருவிழாவில் இருந்து விலகிக்கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக லயன் சிட்டி செய்லர்ஸ் குழு விளையாடும் என்று ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
தேசிய விளையாட்டரங்கில் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் டைகர் கிண்ணப் போட்டியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் டோட்டன்ஹேம் ஹாட்ஸ்பர் குழுவை ரோமா எதிர்கொள்ளவிருந்தது. பின்னர் மூன்று நாள்கள் கழித்து தென்கொரியாவில் உல்வர்ஹேம்டன் வான்டரர்ஸ் குழுவுடன் ரோமா பொருதவிருந்தது.
மாறாக, எதிர்வரும் காற்பந்துப் பருவத்திற்கு போர்ச்சுகலின் அல்கார்வேயில் ரோமா தயாராகும். 2021ல் ரோமா நிர்வாகியாக ஜோசே மொரின்யோ பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரு பருவங்களுக்கு முந்தைய ஆட்டங்களை போர்ச்சுகலில்தான் ரோமா விளையாடியது.
இந்நிலையில், $199க்கு ஆட்ட நுழைவுச்சீட்டுகளை வாங்கியிருந்தோருக்குக் கட்டணம் தானாக திரும்ப வழங்கப்படும். $99லிருந்து மற்ற நுழைவுச்சீட்டுகளை வாங்கியிருந்தோர் கட்டணத்தைத் திரும்பப் பெற https://bit.ly/refund-m1 எனும் இணையப் பக்கத்தில் ஜூலை 21ஆம் தேதி நண்பகலுக்குள் கோரலாம்.