ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை இந்தியாவிற்கு பொன்னான நாளாக அமைந்த்தது
பெண்களுக்கான வூஷு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நவ்ரெம் ரோஷிபினா தேவி.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்று சாதித்துள்ளார் ரோஷிபினா.
இருப்பினும் தமக்கு தங்கப் பதக்கம் கிடைக்கிவில்லை என்று ஏமாற்றம் தெரிவித்துள்ளார் ரோஷிபினா.
கடினமாக உழைத்தும் தங்கம் கிடைக்காதது கவலை தருவதாக அவர் கூறினார்.
தேவி, 60 கிலோகிராம் எடைப் பிரிவின் இறுதிச்சுற்றில் சீனாவின் வு சியோவ்வெய்யிடம் 0-2 என்று தோல்வியடைந்தார்.
“போட்டியில் சில தவறுகள் செய்துவிட்டேன், அதனை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சி செய்வேன். நாட்டிற்கு தங்கம் வென்று தர மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன் ஆனால் அது இம்முறை நடக்கவில்லை. அடுத்த ஆசியப் போட்டியில் கட்டாயம் தங்கப் பதக்கம் வெல்வேன்,” என்றார் ரோஷிபினா.
இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார் ரோஷிபினா.
கலவரங்களால் மிகவும் மோசமான நிலையில் உள்ள மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஷிபினா.
தம் பெற்றோர் இன்னும் மணிப்பூரில் வசிப்பதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்பதாகவும் ரோஷிபினா தெரிவித்தார்.