நியூகாசல்: இங்கிலாந்தின் கரபாவ் கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி வெளியேற்றப்பட்டுள்ளது. இப்போட்டியின் மூன்றாம் சுற்றில் சக பிரிமியர் லீக் குழுவான நியூகாசல் யுனைடெட், சிட்டியை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
ஈராண்டுகள் முன்புவரை கரபாவ் கிண்ணப் போட்டியில் கொடிகட்டிப் பறந்துவந்த சிட்டி, அண்மைக் காலமாக சற்று தடுமாறி வந்துள்ளது.
நியூகாசல், சென்ற பருவத்தின் கரபாவ் கிண்ணப் போட்டியில் இறுதியாட்டம் வரை முன்னேறியது. இறுதியாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டிடம் தோல்வியடைந்தது.
இந்தப் பருவத்தின் கரபாவ் கிண்ணப் போட்டியில் அடுத்த சுற்றிலேயே நியூகாசல் யுனைடெட், மான்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்வுள்ளது.
புதிய உரிமையாளர்களின்கீழ் சென்ற பருவத்திலிருந்து பெரிய குழுவாக வளரும் அறிகுறிகளை நியூகாசல் காட்டி வருகிறது. இந்தப் பருவத்தை சிறிதளவு தடுமாற்றத்துடன் தொடங்கியபோதும் கடந்த இரண்டு வாரங்களாக இக்குழு நன்கு மேம்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கிண்ணம் ஒன்றை வெல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது நியூகாசல்.
மற்றொரு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் செல்சி, பிரிமியர் லீக்கில் சிறப்பாக ஆடிவரும் பிரைட்டனை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் தொடர் சரிவை நிறுத்திக்கொண்டது செல்சி.
மற்ற மூன்றாம் சுற்று ஆட்டங்களில் லிவர்பூல், லெஸ்டர் சிட்டியை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது, பிரென்ட்ஃபர்டை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஆர்சனல்.