மும்பை: இந்தியாவில் 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் அனைத்து அணிகளுக்கும் பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அணிகள் அவர்களின் பலத்தை முழுமையாக சோதிக்கவும் இந்திய ஆடுகளத்திற்க்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் பயிற்சி போட்டிகள் முக்கிய ஆட்டங்களாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அணிகளின் பயிற்சிக்கும் பயிற்சிப் போட்டிகளுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் மழை பெய்ததால் தென்னாப்பிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் மழை பெய்தது, அதனால் பாகிஸ்தான்- நியூசிலாந்து ஆட்டத்தில் இடையூறு ஏற்பட்டது.
சனிக்கிழமை கெளஹாத்தியில் இங்கிலாந்து இந்தியா இடையே நடக்கவிருந்த ஆட்டமும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்தில் சனிக்கிழமையும் மழை பெய்ததால் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆட்டமும் பாதிக்கப்பட்டது.