ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டில் இடம்பெற்ற ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
பூவா தலையாவில் வெற்றிபெற்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணியை ஆப்கானிஸ்தான் அணியால் சமாளிக்க முடியவில்லை.
18.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை ஓயாததால், தரவரிசையில் இந்திய அணி முன்னிலை பெற்றதை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் பங்ளாதேஷ் அணியும் மோதின. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் 5 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டது.
முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் 65 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியால் 48 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. சிறப்பாக விளையாடிய பங்ளாதேஷ் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
முன்னதாக, மகளிர் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியப் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.