லக்னோ: இந்தியாவிடம் ஏற்கெனவே தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண ஆட்டத்தின் 10வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடமும் தோற்றுப்போனது. அதுவும் 134 ஓட்ட வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வியைச் சந்தித்தது.
உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியா, தொடா்ந்து 2வது தோல்வியைச் சந்தித்து நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இரண்டு ஆட்டங்களிலும் பந்தடிப்பாளர்களும் பந்துவீச்சாளர்களும் திறனை வெளிப்படுத்தத் தவறினர்.
அதேநேரம் தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இரண்டையுமே அந்த அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று 2.36 என்னும் நல்லதொரு சராசரி ஓட்டவிகிதத்தை (ரன் ரேட்) பெற்றுள்ளது.
முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களைக் குவித்தது. குவின்டன் டி காக் சதமடித்து 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களில் சரணடைந்தது. அந்த அணியின் மார்னஸ் லபுஷேன் மட்டுமே அதிகபட்சமாக 46 ஓட்டங்களை எடுத்தார்.
திங்கட்கிழமை இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வென்று நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.