மும்பை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 23வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் பங்ளாதேஷும் இன்று மோதுகின்றன.
ஆட்டம் மாலை 4:30 மணிக்கு வான்கடே விளையாட்டரங்கில் நடக்கிறது.
இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளை பந்தாடிய தென்னாப்பிரிக்கா சிறிய அணியான நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது.
கடைசியாக பங்ளாதேஷ் அணியுடன் விளையாடிய நான்கு ஒருநாள் ஆட்டங்களில் மூன்றில் தென்னாப்பிரிக்கா தோற்றுள்ளது.
2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஆட்டத்திலும் பங்ளாதேஷிடம் தோற்றது தென்னாப்பிரிக்கா.
அதனால் இந்த ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி தர பங்ளாதேஷ் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்ளாதேஷ், இதுவரை நான்கு ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் பங்ளாதேஷ் மோசமாக தோற்றது. அதனால் பங்ளாதேஷ், இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சி செய்யக்கூடும்.
அதேநேரம், நெதர்லாந்திடம் தோற்றதுபோல் பங்ளாதேஷ் அணியுடன் தோற்காமல் இருக்க தென்னாப்பிரிக்கா போராடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.