சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரரான விராத் கோஹ்லிக்குச் சொந்த நாட்டில் மட்டுமன்றி, உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவர்களில் ஒரு சிலர் கோஹ்லி மீதான தங்களின் அன்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் ஒருவர் 5,000 பந்துகளைக் கொண்டு சுவரோவியம் படைத்திருந்தார்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தம்முடைய தீவிர ரசிகர் ஒருவர்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கோஹ்லி.
சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் அக்டோபர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, ஸ்ரீநிவாஸ் என்ற உடற்குறையுள்ள அந்த ரசிகர், தாம் வரைந்த கோஹ்லியின் உருவப்படத்துடன் வெள்ளிக்கிழமையன்று சேப்பாக்கம் அரங்கிற்குத் சென்றிருந்தார்.
திடலுக்குப் பயிற்சிக்கு வந்தபோது ஸ்ரீநிவாசையும் அவரது கையிலிருந்த தன் படத்தையும் கண்ட கோஹ்லி, நேராக அவரிடம் சென்று, அளவளாவி, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்வு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
சென்னையில் பிறந்த ஸ்ரீநிவாஸ், கோஹ்லியின் உருவப்படத்தை வரைய 40 மணி நேரத்திற்குமேல் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
“அது கனவுபோலவே இருந்தது. நேராக என்னிடம் வந்த கோஹ்லி, நான் வரைந்த உருவப்படத்தில் நினைவுக் கையெழுத்திடவா என்று கேட்டார். உறுதியாக வேண்டும் என்ற நான், அவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டார். அதற்கு அவரும் இணங்கினார். அவரது ‘கவர் டிரைவ்’ பந்தடிப்புக்கே நான் அவருடைய ரசிகராகிவிட்டேன். இந்திய அணியினர் 15 பேருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன்,” என்றார் ஸ்ரீநிவாஸ்.