சென்னை: சொத்து ஆவணங்களை நகல் எடுக்கச் சென்றபோது அவை திடீரென மாயமாகிவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.
சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் தினேஷ் கார்த்திக்.
இரு நாள்களுக்கு முன்னர் காவல்துறையில் அளித்த புகார் மனுவில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தமக்கு சொந்த வீடு இருப்பதாகவும் அவ்வீட்டுடன் தொடர்புடைய ஆவணங்களை நகலெடுக்கச் சென்றபோது அவை மாயமானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 28ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள ஒரு கடைக்கு ஆவணங்களை எனது காரில் கொண்டு சென்றேன். அங்கு சென்று பார்த்தபோது, நான் எடுத்துச் சென்ற ஆவணங்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
“எனவே, காணாமல்போன எனது வீட்டின் சொத்து ஆவணங்களைக் கண்டுபிடித்து தர வேண்டும்,’‘ என தினேஷ் கார்த்திக் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். தினேஷ் கார்த்திக் வீட்டிலிருந்து அவர் சென்ற கடை வரை உள்ள கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை வைத்து முதற்கட்ட விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
அண்மையில் பிரபல திரைப்பட நடிகர் ராம்கியும் தனது வீட்டின் சொத்து ஆவணங்களைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.