கொழும்பு: ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்பிலுள்ள ஆர் பிரேமதாசா விளையாட்டரங்கில் செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், போட்டி நாளன்று அங்கு மழை பெற அதிக வாய்ப்புள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, ஞாயிற்றுக்கிழமை போட்டி நடக்காமல் போனால் மறுநாள் திங்கட்கிழமை அப்போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், காப்புநாளான (reserve day) திங்கட்கிழமையன்றும் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், ரசிகர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
மழை காரணமாக கடந்த 7ஆம் தேதியன்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாமலும் போனது.
முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய பிரிவுச் சுற்று ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டு, தரப்புக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நிலவரப்படி ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றின் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
சூப்பர் 4 சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றில் மோதும்.