விருத்தாச்சலம்: விருத்தாச் சலம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயமடைந்தனர்.
சேலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பிற்குச் சென்றுகொண்டு இருந்த அந்தப் பேருந்து திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே திடீரென நிலைதடுமாறியது.
தொடர்ந்து, சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ள தடுப்புக் கட்டை மீது பயங்கரமாக மோதிய பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் தூக்க கலக்கம் தெளிந்த பயணிகள் பேருந்து மோதிய வேகத்தில் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் உள்பட பேருந்தில் இருந்த 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் காயமடைந்தோரை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நிகழ்ந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.