சென்னை தி.நகரில் உள்ள புடவைக் கடை ஒன்றில் மூன்று பெண்கள் விலையுயர்ந்த புடவைகள் சிலவற்றைத் திருடிச் சென்ற காட்சி அக்கடையின் கண்காணிப்புக் கருவியில் பதிவானது.
அக்டோபர் 28ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. முகக்கவசம் அணிந்த பெண்கள் மூவர் தலா ரூ.2 லட்சம் மதிப்புடைய 10 புடவைகளை பத்தே நிமிடங்களில் திருடிச் சென்றனர்.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைக் கண்காட்சியின்போது திருட்டுச் சம்பவம் நிகழ்ந்தது. புடவை வாங்க வந்தவர்கள்போல நடித்த அப்பெண்கள் அக்கண்காட்சியில் 10 நிமிடங்கள் செலவிட்டனர். அங்கும் இங்குமாக நோட்டமிட்ட அவர்களில் ஒருவர், மேசையில் இருந்த புடவைகளை மடித்து தமது புடவைக்குள் ஒளித்து வைத்து மற்ற இருவருடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
கண்காட்சிக்குப் பொறுப்பு வகித்த ஒருவருக்கு அவர்களது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சியை ஆய்வு செய்த பிறகு திருட்டு நேர்ந்ததை அவர் கண்டறிந்தார்.
இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட அக்காணொளி இதுவரை 4.8க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
எனினும், விலையுயர்ந்த புடவைகளைத் திருடிச் சென்ற அப்பெண்கள் பின்னர் தங்களது முடிவை மாற்றிக்கொண்டனர். அப்புடவைகளை கூரியர் வழியாகக் காவல் நிலையத்திடம் அவர்கள் ஒப்படைத்தனர். வழக்கத்திற்கு மாறான இந்த முடிவுக்கான காரணம் தெரியவில்லை.