சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஜனவரி 14 தொடங்கி ஜனவரி 17 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இரண்டாம் நாள் கால்நடைகளை போற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடு, ஆடு வளர்ப்போர் அவற்றை குளிப்பாட்டி, கொம்புகளை சீவி, வர்ணம் பூசி, சலங்கை கட்டி அலங்கரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பொங்கல் வைத்து கால்நடைகளை வழிபட்டு நன்றி கூறுவர்.
உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மாட்டுப் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாக மாட்டுப்பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் விடுமுறைவிடப்படுவது வழக்கம். அந்த வகையில் பெரும்பாலான கடைகள், மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாள் என்பதால். பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், சிறுவர் விளையாட்டுகள் என கிராமங்களில் கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.
பல்வேறு ஊர்களில் மாடுகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன ஜல்லிக்கட்டு போட்டிகளும் பெரும்பாலான ஊர்களில் நடந்து வருகிறது.