சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி காலமானார். அவருக்கு வயது 47.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கடந்த ஐந்து மாதங்களாக அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
‘பாரதி’ திரைப்படத்தில் தந்தை இளையராஜா இசையில் பவதாரிணி பாடிய ‘மயில் போல’ என்ற பாடலுக்காக அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
பின்னணிப் பாடகியாகப் பெயர் வாங்கிய பவதாரிணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.
பவதாரிணியின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சனிக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவும் தற்போது இலங்கையில் உள்ளார் என தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.