தேனி: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் கணிசமான வேகத்தில் அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
தமிழக, கேரள எல்லையில் 12 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.
கேரள லாரிகளில் என்னென்ன பொருள்கள் ஏற்றி வரப்படுகின்றன என்று அதிகாரிகள் குறித்துக்கொள்கின்றனர். சரக்கு, இதர வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுவது கட்டாயமாகி உள்ளது.
தமிழக - கேரள எல்லையில் கால்நடைத்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
எல்லையில் அமைக்கப்பட்டுள்ள 12 சோதனைச் சாவடிகளும் தற்போது கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்களைக் கொண்டுவரும் வாகனங்கள் முழுமையாக சோதிக்கப்படுகின்றன.
வாகனங்களில் வருபவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்துக்குரிய வாகனங்கள் உடனடியாக கேரளாவுக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன. கண்காணிப்புப் பணியில் தொய்வு ஏற்படக்கூடாது என அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.