நெல்லை: தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் திடீரெனப் பச்சை நிறத்திற்கு மாறியது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
எதனால் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து நாள்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 46,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிக்கு தாமிரபரணி ஆற்றைத்தான் நம்பி உள்ளன.
மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து ஆள்துளைக் கிணறு மூலம் எடுக்கப்படும் தாமிரபரணி ஆற்று நீர் சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி, கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் 500க்கும் மேற்பட்ட குக்கிராம மக்களும் தாமிரபரணி ஆற்றைத்தான் நம்பி உள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் திங்கள்கிழமை ஆற்றுத்தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிப் பகுதிகளிலும் நாள்தோறும் விநியோகிக்கப்படும் தண்ணீர் பச்சை நிறமாகத்தான் உள்ளது. இந்தத் தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்த இயலாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் என்ற இடத்தில் ஆற்று நீர் வழக்கம்போல் தெளிவாக உள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட ஒரு பகுதியில்தான் தண்ணீர் பச்சை நிறத்திற்கு மாறியுள்ளது.
எனவே, அப்பகுதியில் ஆலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்பட்டனவா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதை ஏற்று அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.