திருச்சி: திருச்சி - திருவரங்கச் சாலையில் மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவானைக்காவலில் இருந்து திருவரங்கம் செல்லும் காந்தி சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீரென பள்ளம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அதே பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடைக்கு மேற்பகுதியில் பெரிய ஓட்டை விழுந்து, அது தற்காலிகமாக அடைக்கப்பட்டது.
இப்போது மீண்டும் அதே பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடையின் குழாய் வெடித்ததால்தான் இந்தப் பள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவ்வழியே போக்குவரத்துச் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது. அவ்வழியே செல்லும் வாகனம் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகின்றன.
திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.