மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 75,000 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமை நீதிபதி கங்கபூர்வாலாவுக்கு வியாழக்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மீது மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நம்பிக்கை காரணமாக மதுரை கிளையில் தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
“கடந்த 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 71,000 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. அதே காலகட்டத்தில் 75,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
“உயர் நீதிமன்ற அமர்வு மதுரையில் அமைக்கப்பட்டிருக்காவிட்டால் இங்கு தாக்கலாகும் 50% வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று இருக்கும். அவ்வாறு நிகழ்ந்து இருந்தால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்,” என்று தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மேலும் தெரிவித்தார்.