சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, குடிநீர் விநியோகப் பணிகளை சீராக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“இத்தொகையை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்குப் பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
“குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும் தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகள் இன்றி பராமரித்திட வேண்டும்.
“நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர்த் திட்டங்கள் மூலம் பயன் பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவற்றுக்குப் பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு என்று முதல்வர் கூறினார்.
மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் இந்தப் பற்றாக்குறையால் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
“கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். ஆனால் கோடையில் போதுமான தண்ணீர் கிடைக்காது. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.