சென்னை: உள்நாட்டு விமானப் பயணத்தின்போது தங்கக்கட்டிகளைக் கொண்டு செல்லலாமா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக சுங்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானப் பயணம் மேற்கொண்டதாகவும் அப்போது 497 கிராம் தங்கத்தை எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தம்மை பிடித்து வைத்து விசாரணை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ள சையது இப்ராஹிம், பெங்களூரில் நகைகள் செய்யக்கூடியவர்கள் கிடைக்காததால் தாம் தங்கத்தை சென்னைக்கு கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கப் பொருள்கள் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வந்தால் மட்டுமே அவற்றைப் பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்கிறது என்றும் உள்நாட்டில் தங்கம் கொண்டு செல்ல தடையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
பொதுவாக வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் குறிப்பிட்ட அளவில் தங்கம் கொண்நலள். மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி தங்கம் கொண்டு வருவது கடத்தலாகக் கருதப்படுகிறது.
சையது இப்ராஹிம் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்நாட்டு விமானத்தில் தங்கக்கட்டிகளைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் மனுதாரரின் மனு தொடர்பாக ஒரு மாதத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.