சென்னை: காவிரி ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
அப்போது, நான்கு மாநிலங்களில், காவிரி பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தின் முடிவில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28ஆம் தேதி வரை கர்நாடக அரசு 174.497 டிஎம்சி நீர் திறந்துவிட்டிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், இதுவரை 78.728 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்றும் 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது என்றும் தமிழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“தற்போது மேட்டூர் அணையில் 20.182 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,200 கன அடி நீர்திறக்கப்படுகிறது.
“கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 25 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும்,” என்று தமிழகத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும், அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.