சிங்கப்பூர் நிலவரத்தை விளக்கினார் சுகாதார அமைச்சர் ஓங்
கடந்த ஒரு மாத காலமாக கொவிட்-19 கிருமித்தொற்று அலையின் இடைப்பட்ட பகுதியில் சிங்கப்பூர் இருந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் 1,400 என பதிவான அன்றாடத் தொற்று எண்ணிக்கை கடந்த வாரம் 4,000க்கு அதிகரித்த நிலையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தொற்று எண்ணிக்கையில் 30% மறுதொற்றுச் சம்பவங்கள் என்றார் அவர். முந்திய தொற்று அலையின்போது 20% முதல் 25% வரையிலான விகிதத்தில் பதிவான மறுதொற்று விகிதத்தைக் காட்டிலும் இது அதிகம். தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் தற்போதைய கொவிட்-19 திரிபு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் திரு ஓங் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 80ஆக இருந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்தில் 220க்கு அந்த எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், தொற்று கடுமையாகப் பரவிய காலத்தில் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் இது மிகவும் குறைவு. தீவிர சிகிச்சை நாடுவோரின் எண்ணிக்கையும் நிலையாகவும் குறைவாகவும் நீடிக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் அந்தப் பிரிவில் 10க்கும் குறைவானவர்களே அனுமதிக்கப்பட்டு வந்ததாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் நேற்று நடத்திய வருடாந்திர செயல்திட்டக் கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசினார்.
“கொவிட்-19 பெருந்தொற்று சிரமத்திலிருந்து நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்பதை தற்போதைய தொற்று அலை தெளிவாக உணர்த்துகிறது. இதேபோன்ற தொற்று அலை இருந்தபோதும் நாம் நமது வழக்கமான வாழ்க்கையைத் தொடர்ந்தோம். தொற்று எண்ணிக்கையைக் கண்டு பதறவில்லை. உள்ளூர் தொற்று நிலைமை இவ்வாறுதான் இருக்கும்,” என்றார் திரு ஓங்
சிங்கப்பூரில் தற்போதைய தொற்று எண்ணிக்கை ஏற்றத்துக்கு சுற்றுப்பயணிகள் காரணம் என்று வெளியான கருத்தை அவர் மறுத்தார்.
“உள்ளூரில் பரவும் தொற்று இது. எப்போதும் சமூகத்தில் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது. இதுபோன்ற நிலையில், தனிப்பட்டோரிடம் சமூகத்திலும் மறுதொற்று காணப்படும். தற்போது நடைபெறுவது அதுதான். தற்போதைய தொற்று அலை இறக்குமதி செய்யப்பட்டது அல்ல,” என்று திரு ஓங் விளக்கினார்.
சமூகப் பங்காளிகளும் பொது மருத்துவர்களும் தற்போதைய நிலைமையை தங்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெளிவாகப் புரிய வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
“உடல்நிலை சரியில்லாத நோயாளிகள் வீட்டிலேயே தங்கி இருப்பதையும் முகக்கவசம் அணிவதையும் தொடர வேண்டும். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களும் வருடாந்திர தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்,” என்றார் திரு ஓங்.